Wednesday, November 14, 2007

தீர்வு 2 : கல்வித்துறை மேம்பாடு :

இன்றைக்கு தமிழக அரசு சமச்சீர் கல்வித் திட்டம் என்ற ஒன்று அறிமுகப் படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து அதற்கான ஆயத்தங்கள் தொடங்கப்பட உள்ளன. மிகவும் வரவேற்கத்தக்க விஷயம் இது. இவ்வளவு நாள் கழித்தாவது இதை உணர்ந்தார்களே என்று சந்தோஷப்படுவோமாக.

cbse மற்றும் matriculation மாணவர்கள் வெகு சுலபத்தில் ஐ.ஐ.டி மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் எளிதாக சேர முடிகிறது. தமிழ் வழி மற்றும் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களில் மிக நன்றாகவும் கடினமாகவும் படிப்பவர்கள் மட்டுமே இதை எல்லாம் நினைத்துப் பார்க்க முடியும். மற்றவர்கள் எல்லாம் பணம் சேர்த்து சுய நிதிக் கல்லூரிகளில் பொறியியல் பட்டப் படிப்போடு திருப்தி அடைய வேண்டியதுதான். பணமும் இல்லாதவர்கள் மேற்படிப்பை மறந்துவிட்டு வயிற்றுப்பாட்டைப் பார்க்க வேண்டியதுதான். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். சாதாரணமாக சொல்லி விட முடியும் இதை. ஆனால் அமுல்படுத்துவது எவ்வளவு கடினம் என்பதை நினைத்துப் பார்த்தாலே மலைப்பாக உள்ளது.

தற்சமயம் மத்திய அரசு மிக முனைப்பாக சில திட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. சர்வ சிக்ஷ்ய அபியான் (அனைவருக்கும் கல்வி) போன்ற பல திட்டங்கள் செயல்படுத்தப்படுவதால் கட்டாயம் இன்னும் சில வருடங்களில் எழுத்தறிவு பெரும்பாலானவர்களுக்கு கிடைத்து விடும். ஆனால் வாழ்க்கைக்கும் இன்னும் வளமான எதிர்காலத்திற்கும் வழிகாட்டும் கல்வியை அடைய இன்னும் பல பேரின் பங்களிப்பு தேவை. உலக வங்கி மற்றும் எஜுகேஷன் செஸ் மூலம் கிடக்கும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்களால் இன்னும் வேகமான முன்னேற்றம் கிடைக்கும் என நம்பலாம். ஆனால் இதில் முக்கியமான பங்களிப்பு என்பது சேவை மனப்பான்மையும் மிக நல்ல ஆழ்ந்த அறிவும் கொண்ட ஆசிரியர்களிடமே உள்ளது. அவர்களது ஒத்துழைப்பு இல்லாமல் எந்த கல்வித்திட்டமும் பயன் பெறாது. சுருங்கக் கூறின் எதிர்காலத்தின் முதுகெலும்பே ஆசிரியர்கள் தான்.

ஒரு நல்ல தாய் நூறு ஆசிரியர்களுக்குச் சமம் என்பர். அதேபோல ஒரு நல்ல ஆசிரியரும் நூறு தாய்களுக்குச் சமம் என்றும் கூறலாம்.

இன்றைக்கு இருக்கும் ஆசிரியர்களில் தகுதியற்ற பல பேர் உள்ளார்கள். இவர்கள் எப்படியோ உள்ளே புகுந்து விட்டார்கள். ஆழ்ந்த அறிவும் தொலை நோக்கும் இல்லாத இவர்களால் கிராமத்து மாணவனுக்கு எப்படி வழி காட்ட முடியும்? இவர்களுக்கு தங்களை வளர்த்துக் கொள்ள ஏதேனும் வாய்ப்போ அல்லது பயிற்சியோ இருக்கிறதா என்று தெரியவில்லை . மாணவர்கள் பல நேரங்களில் சுய உழைப்பையே நம்ப வேண்டி உள்ளது. ஒரு நடிகர் ஒருமுறை கூறினார், ஆசிரியர் திறமையோ அல்லது விருப்பமோ இல்லாதவர்கள் அரசின் வேறு துறைகளுக்கு எழுத்தராகவோ அல்லது வேறு பணிக்கோ மாற்றப்படுவீர்கள். உங்களால் எதிர்கால சமுதாயம் பாதிக்கப்பட கூடாது என்று. சத்தியமான வார்த்தைகள் அவை. வேறு எந்த அரசியல் கட்சியும் இவ்வளவு துணிவான கருத்தைக் கூற வில்லை.
ஆம். மற்ற எந்த துறையில் தகுதியின்மை இருந்தாலும் அது அத்துறையை மட்டுமே பாதிக்கும். ஆனால் ஆசிரியர்களிடம் தகுதியின்மை இருந்தால் அது ஒரு எதிர்கால சந்ததியையே பாதிக்கும்.

பொதுவாக நல்ல அறிவும் நல்ல மதிப்பெண்களும் எடுக்கும் மாணவர்கள் ஆசிரியப் பணியைத் தேர்ந்தெடுப்பது இல்லை. சராசரி மாணவர்கள் மட்டுமே பெரும்பாலும் இப் பயிற்சியைப் பெறுகிறார்கள். அவர்களிடம் இருந்து நல்ல தரத்தை எதிர்பார்ப்பது சரியாகாது. எனவே நல்ல தகுதி உள்ள சிறப்பு ஆசிரியர்களுக்கு பல சலுகைகளை யும் நல்ல ஊதியத்தையும் வழங்கவேண்டும்.

இனியும் ஆசிரியர் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் போது ஆள் கிடைத்தால் போதும் என்றோ, அல்லது வேறு விதமாகவோ செய்து கொண்டே இருந்ததால் இன்னும் மோசமான நிலைமை ஏற்பட்டு விடும். தைரியமாகவும் அதே சமயம் எதிர்கால சந்ததியை மனதில் கொண்டு பொறுப்புடனும் ஒரு தெளிவான முடிவை இதில் எடுக்க தலைவர்கள் தயங்கக் கூடாது.

செய்வீர்கள தலைவர்களே?

அன்புடன்

ஈ. ரா.

Saturday, November 3, 2007

தீர்வு 1: இட ஒதுக்கீட்டுக்கு :

தீர்வு 1: இட ஒதுக்கீட்டுக்கு :

சுதந்திரம் கிடைத்து அறுபது ஆண்டுகள் ஆகியும் இன்றும் அனைவரும் சமம் எனவும் எல்லாரும் எல்லா இடங்களிலும் முழுமையாக இருக்கிறார்கள் என்றும் சொல்ல முடியவில்லை. இத்தனைக்கும் மத்தி முதல் மாநிலம் வரை எல்லா இடங்களிலும் சட்ட வடிவில் இட ஒதுக்கீடு அமுலாக்கப் பட்டு உள்ளது.

தற்போது உச்ச நீதி மன்றம் அட்சியாளர்களைப் பார்த்து இட ஒதுக்கீடு இன்னும் எத்தனை ஆண்டு வழங்கப்படும்? அது குறித்த சரியான புள்ளி விவரம் என்ன? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. இதற்கு உடனடியாக பதில் கூற முடியாது எனவும் அவகாசம் வேண்டும் எனவும் மத்திய அரசு பதில் கூறி இவ்விஷயத்தை தற்காலிகமாக ஆறப் போட்டுள்ளது.

ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு என்ன? ஏன் இத்தனை காலமாக மக்கள் சமம் அடையவில்லை? ஒருவேளை இந்த திட்டமே கோளாறோ? அல்லது அமுல்படுத்தியது சரியில்லையோ? என்ற கேள்விகள் சாதாரண மக்களுக்கு எழுகின்றன. ஓட்டு அரசியலிலேயே ஒண்டு குடித்தனம் நடத்துவதால் அரசியல் கட்சிகளுக்கு இதில் நேரடியாக பதில் கூற முடியாது. முடிந்த வரை ஜவ்வு மாதிரி இழுக்கத்தான் முடியும். இந்த ஆட்சி ஆனாலும் சரி வேறு ஆட்சி ஆனாலும் சரி யாராயினும் இதே கதைதான் நீடிக்கும். கோர்ட் எத்தனை முறை கேட்டாலும் மௌனம் மட்டுமே பதிலாய் வரும்.

நமக்குத்தான் ஓட்டு பயம் இல்லையே. நாமாவது இது பற்றி நியாயமாகவும் நடுநிலையாகவும் சிந்திப்போம். இத்தனை நாள் நடந்தது கண்டிப்பாக ஒரு தெளிவான தொலை நோக்குடன் செயல்படவில்லை என்பதும் அதே சமயம் தமிழ் நாடு போன்ற மாநிலங்களில் சமூக நீதி நிலை பெற்றதற்கு இதுவே முழு காரணம் என்பதும் மறுக்க முடியாத உண்மைகள். சரி, முதலில் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் ஆகியோருக்காக இருந்தது மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் என்றெல்லாம் கிளை போல் பரவி, சாதி அடிப்படையிலான முழு பிரிவினை ஆகிவிட்டது.

மக்கள் மனமும் தங்களுக்கு ஏதானும் சலுகைகள் கிடைக்குமென்றால் தங்களை இன்னும் கீழான பட்டியலில் சேர்த்தாலும் கவலை இல்லை என்ற எண்ணத்தில் ஊறி அதற்காக அவ்வப்போது போராடவும் துணிந்து விட்டார்கள்.

இன்றைக்கு நகரங்களில் பெரும்பாலும் அறிவிக்கப்படாத சமத்துவபுரங்களான பகுதிகளே இருப்பதால் இவ்விடங்களில் சாதி அடிப்படையிலான ஒதுக்கீடு என்பதே ஒரு கேலிகூத்துதான்.

ஏற்கனவே இட ஒதுக்கீட்டின் மூலம் பயன் பெற்றவர்களோ அல்லது அவர்களின் குடும்பத்தாரோ மீண்டும் மீண்டும் பயன் அடைகிறார்களே அன்றி உண்மையாக பயன் பெற வேண்டியவர்கள் அடி மட்டத்திலேயே இருக்கிறார்கள். இன்னும் பல கிராமங்களில் தாழ்த்தப்பட்டவர்கள் இரட்டை குவளை முறையாலும் மற்றும் பல சமூக அவலங்களாலும் பாதிக்கப்பட்டே இருக்கிறார்கள். ஓரளவு தலித் அமைப்புக்கள் பலமாக உள்ள இடங்களிலும் அல்லது வலிமையான ஆட்களாக இருப்பவர்களும் மட்டுமே இந்த கொடுமைகளில் இருந்து தப்ப முடிகிறது. சட்டங்கள் போட்டும் இதை மாற்ற முடியவில்லை. அப்படியாயின் இதற்கு தீர்வு தான் என்ன? உண்மையான கல்வியும் பதவிகளும் அவர்களுக்கோ அல்லது அவர்களை சார்ந்தவர்களுக்கோ இன்னும் கிடைக்கவில்லை என்பது தானே? இதற்கு முன்னரே இட ஒதுக்கீடு மூலம் பயனடைந்தவர்களே மீண்டும் மீண்டும் அனுபவிப்பதால் அங்கும் கீழ் மட்டத்தில் இருப்பவர்கள் மேலும் கீழாகிறார்கள். அரசாங்கங்களுக்கோ இதில் ஒரு தைரியமான தெளிவான முடிவை எடுக்க பயமாக உள்ளது. எங்கே தொட்டால் எங்கே வெடிக்குமோ என்று. எந்த அரசாங்கம் இதில் கையை வைத்தாலும் எதிர் கட்சிகள் ருத்ர தாண்டவம் ஆடத்தான் செய்யும். அதற்காக அப்படியே விட்டு விட முடியுமா. இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் அல்லது எத்தனை தலைமுறைகளுக்குத்தன் ஏழைகளும் ஒதுக்கப்பட்டவர்களும் இட ஒதுக்கீட்டை நம்பி வாழ வேண்டும்? அவர்களுக்கு தன்னம்பிக்கையும் போட்டி போடும் குணமும் வளர வேண்டாமா? நான் இப்படி இருந்தாலே போதும், எனக்கு கோட்டா இருக்கு என்று வளரும் பருவத்திலேயே அவனது திறமையை நசுக்கும் முயற்சி அல்லவா இது? ஒரு குறிப்பிட்ட கால வரையை நிர்மாணிக்க முடியவில்லை என்றால் அரசுகள் எதற்கு? கட்சிகள் எதற்கு? ஒரு வேளை இந்த பிரச்சினை முடிந்து விட்டால் நாம் வேறு எதை வைத்து கட்சி வளர்ப்பது அல்லது வயிறு வளர்ப்பது என்று நினைக்கிறார்களோ? சரி அவர்கள் எப்படியாவது போய்த் தொலையட்டும். நாமாவது ஒரு முடிவை முன் வைப்போம்.

இது நடக்குமா என்பது தெரியாது. ஆனால் நாம் நமக்குள்ளே யோசிப்போம்.
முதலில் இன்றைக்கு உள்ள ஒதுக்கீடுகள் என்னென்ன? பி.சி., எம்.பி.சி, எஸ்.சி., மற்றும் எஸ்.டி. சில மாநிலங்களில் முதல் இரண்டு பிரிவும் சேர்த்து ஒ.பி.சி. என்று உள்ளது. முற்பட்ட வகுப்பினர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு என்று எதுவும் கிடையாது. இந்தியா போன்ற மாபெரும் மக்கள் தொகை நாட்டில் நம்மிடம் இருக்கும் பள்ளி, கல்லூரிகள் மிகவும் குறைவு. இந்த விகிதாசாரத்தை அதிகரிக்க பல்வேறு திட்டங்கள் போடப்பட்டும் அவை முழு பலனைத் தரவில்லை. அவற்றின் எண்ணிக்கையை அதிகரிப்பதோடு தரத்தையும் மேம்படுத்தினால் மட்டுமே எதிர்காலத்தில் நல்ல பலனைப் பெற முடியும். சரி இட ஒதுக்கீடுக்கு வருவோம். இன்றைக்கு பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேரும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் அனைவருக்கும் அவர்கள் பட்டப் படிப்பு முடிக்கும் வரை இடஒதுக்கீடு வழங்கப்படும் என்று அரசு அறிவிக்கட்டும். அதாவது சுமார் பதினைந்து ஆண்டுகள். அந்த காலகட்டத்தில் அவர்களுக்கு பள்ளிப் படிப்போடு பல விதமான திறமைகளையும் பல்வேறு மொழி ஆர்வத்தையும் உயர்ந்த அறிவியல் மற்றும் கணினி பயிற்சியையும் தகுந்த ஆசிரியர்களையும் சமூக ஆர்வலர்களையும் கொண்டு பயிற்றுவிக்கட்டும். அதே போல இன்றைக்கு ஆறாம் வகுப்பு சேரும் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிள்ளைகளுக்கு இட ஒதுக்கீடு தொடரட்டும். அவர்கள் பட்டபடிப்பு முடிக்கும் வரை அதாவது சுமார் ஒன்பது ஆண்டுகள். மேலும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இன்றைக்கு ஒன்பதாம் வகுப்பு படிப்பவர்கள் முதல் இட ஒதுக்கீடு வழங்கப்படட்டும். அதாவது சுமார் ஏழு ஆண்டுகள். அதன் பிறகு அனைவருக்கும் சில பொருளாதார அல்லது ஏற்கனவே அனுபவித்திருத்தல் போன்ற கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்து உண்மையான சமத்துவத்தை சரித்திரத்தில் இடம் பெறச்செய்யலாம். இன்றைய சூழ்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள தகுதி வாய்ந்த முற்பட்ட வகுப்பினருக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கு கொடுக்கும் கால அளவீட்டில் ஒதுக்கீடு வழங்கலாம். சிலர் சொல்வது போல் உடனடியாக இட ஒதுக்கீட்டு முறையை கபளீகரம் செய்வதும் நாம் இவ்வளவு நாள் செய்து வந்த சமூக நீதிக்கு பாதகம் ஆகிவிடும். ஆனால் இன்றைக்கு பெரும்பாலான கட்டமைப்புகளும் அரசாங்கத்திடம் பண வசதியும் உதவி செய்ய பலரும் இருக்கும் போது இந்த கால அளவே அதிகம் தான். கல்வி என்பதை கட்சிகளுக்கு அப்பாற்பட்ட, ஜாதிகளுக்கு அப்பாற்பட்ட, வாக்கு வங்கிக்கு அப்பாற்பட்ட விஷயமாக்கி, எந்த அரசாங்கம் வந்தாலும் இது சத்துணவு போல் செயல்படுத்தப்படும் என்ற ஒரு வெறியுடன் ஈடுபட வேண்டும்.
தங்கள் பிள்ளையை ஒன்றாம் வகுப்பு சேர்க்கும் போதே அவனை எப்படி ஆக்க வேண்டும் என்று ஒவ்வொரு பெற்றோரும் விரும்பி முடிவு எடுக்கிறார்கள். அப்படியாயின் அரசு தனது மக்களின் பிள்ளைகளுக்கு நல்ல கல்வியையும் உண்மையான கௌரவமான நிலையையும் தர வேண்டாமா?

சிந்திப்பீர்களா தலைவர்களே?

அன்புடன்,

ஈ. ரா.